ரசிகரின் கேள்விக்கு இளையராஜா அசத்தல் பதில்! ‘நான் இசையின் மூலமாக ரியாக்ட் செய்கிறேன்.

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பகிர்ந்துள்ள விஷயங்களுக்கும், கேள்விகளுக்கும் இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் காணொலியில் பதிலளித்துள்ளார்.
கேள்வி: ‘கண்ணே கலைமானே’ பாடலில் ‘காதல் கொண்டேன். கனவினை வளர்த்தேன்’ வரிகள் வரும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறதே?
நான் இந்த பாடலை உருவாக்கும் போது, மொத்த பாடலும் ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே வந்து விட்டது. அவ்வளவு தான். இந்த பாடலின் இயற்கையான அமைப்பு முறையே, உங்கள் இதயத்தை நேரடியாக தொடும்படி அமைந்திருக்கும். அதனால் தான் இந்த பாடலைக் கேட்பவருக்கு கண்ணீர் வரும்.
கேள்வி: தமிழ் சினிமாவில் காமெடி படங்களில் சிறந்த காதல் இசையை கொடுத்தவர்களில் இளையராஜா முக்கியமானவர். உதாரணமாக ‘ஆண்பாவம்’ படத்தைச் சொல்லலாம்!
பாராட்டுக்கு நன்றி. நான் இசையின் மூலமாக ரியாக்ட் செய்கிறேன். அவ்வளவு தான். படத்தின் போக்கிற்கு அது பொருந்தி போகிறது.
கேள்வி: சென்னையில் சமீபத்தில் நடந்த ‘ராக் வித் ராஜா’ இசை நிகழ்ச்சியில் மேடையில் தனுஷ் பாடிய பாடல் தனி ட்ராக்காக வெளியிட வேண்டும் என ஆசைப்படுகிறேன். திரும்ப திரும்பக் கேட்க தூண்டும் பாடல் அது.
ஒரு பாடலை ஒருவர் உருவாக்கி அது உங்களுடைய மனதில் நிற்கிறது என்றால், அது உங்கள் திறமை அல்ல. அதை உருவாக்கியவருடைய ஆழமும், திறமையையும் தான் சொல்ல வேண்டும். அது உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால் அது தான் உயர்ந்த கலைப்படைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். அதனால், உங்கள் இதயத்தைத் தொட்டதற்காக தனுஷைப் பாராட்டுகிறேன்.
