வல்லம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில், புகையிலை பொருட்கள் 170 கிலோவை காரில் மறைத்து கொண்டு வந்த வாலிபரை போலீசார் கைது.
தஞ்சை அருகே வல்லம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோவை காரில் மறைத்து கொண்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை அருகே வல்லம் மின் நகர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து விசாரித்தனர்.
இதில் காரை ஓட்டி வந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியதால் சந்தேகமடைந்த போலீசார் காரை தீவிரமாக சோதனை செய்தனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோ கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தஞ்சை வெட்டுக்காரத் தெருவை சேர்ந்த கிரிதரன் (27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் புகையிலை பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.