வேலூர் அரசு மருத்துவமனையில் கிடப்பில் போடப்பட்ட ஆக்சிஜன் குழாய் பதிக்கும் பணி!
வேலூர் அரசு மருத்துவமனையில் கிடப்பில் போடப்பட்ட ஆக்சிஜன் குழாய் பதிக்கும் பணி!
வேலூர், ஆக.19-
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம், சித்தூர், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர்.
தினமும் 500க்கும் மேற்பட்டோர் நோயாளிகளாகவும், 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கு ஏற்ப அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது.
அதன்படி அங்குள்ள விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்திலிருந்து புறநோயாளிகள் பிரிவுக்கு ஆக்ஸிஜன் எடுத்து செல்ல இரண்டு பிரிவு கட்டடங்களுக்கும் இடையே அறுவை சிகிச்சை பிரிவு கட்டடம் செல்லும் வழியில் ஆக்ஸிஜன் குழாய் பதிக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
தற்போது அந்த பணி முழுமை பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லாதவாறு கயிறு கட்டப்பட்டுள்ளது தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு பரிதாப நிலை இங்கு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி அரசு மருத்துவமனை நிர்வாகம் இந்த பணியை விரைந்து முடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நோயாளிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.