ஃபோர்டு ஆலை ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும்-பாமக நிறுவனர் ராமதாஸ்.

சென்னையை அடுத்த மறைமலை நகர் ஃபோர்டு ஆலை ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையை அடுத்த மறைமலை நகர் ஃபோர்டு மகிழுந்து தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான மாற்று வேலை, இழப்பீடு ஆகியவை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், அந்த ஆலை இம்மாத இறுதியில் மூடப்படுவதாக வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலன் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது.
ஃபோர்டு மகிழுந்து நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னை மறைமலை நகரிலும், குஜராத் மாநிலம் சனந்த் நகரிலும் இரு மகிழுந்து ஆலைகள் உள்ளன. வணிகத்தில் இழப்பு ஏற்பட்டதையடுத்து இந்த இரு ஆலைகளையும் மூடுவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது. அதனால், இந்த இரு ஆலைகளிலும் நேரடியாக பணியாற்றும் சுமார் 8,000 பணியாளர்கள் உள்ளிட்ட 38,000 பேர் வேலையிழப்பர் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்; தொழிலாளர்களின் வேலையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
அதன்பின்னர் 9 மாதங்களாகி விட்ட நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலையை டாடா நிறுவனம் வாங்கி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால், சென்னை ஆலையை பிற நிறுவனங்கள் மூலம் நடத்துவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாததாலும், அங்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மகிழுந்து உற்பத்தி அடுத்த சில நாட்களில் தயாரிக்கப்பட்டு விடும் என்பதாலும் எந்த நேரமும் ஃபோர்டு மகிழுந்து ஆலை மூடப்படக்கூடும். ஆனால், அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்று வேலையோ, இழப்பீடோ இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
