அதிமுகவை வழி நடத்தும் திறன் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது – மாணவரணி கூட்டத்தில் தீர்மானம்.

அதிமுகவின் தற்போது யார் தலைமை என போட்டி நடைபெற்று வருகிறது. மேலும் ஒற்றை தலைமை தேவை என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்ற வேளையில் தமிழகம் முழுவதும் எடப்பாடி ஆதரவினர் கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக பதவி ஏற்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டின் பேரில் பகுதி செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று தில்லைநகர் பகுதி சார்பில் மாநகர மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தில்லைநகர் பகுதி கழகச் செயலாளர் முஸ்தபா மற்றும் பகுதியைச் சேர்ந்த கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிமுகவை வழிநடத்தக் கூடியவர் எடப்பாடி பழனிச்சாமி எனவே, அவரை கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க துணை நிற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் கழகத்தின் அவைப்பெயர் ஏற்படுத்தி வரும் திமுக அரசுக்கு துணை போகும் நபர்களை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
