அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை: விறுவிறுப்படையும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி மற்றும் அவரது மகன் அசோக்பாபுவிடம் தனிப்படையினர் இன்று மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சென்னை சிஐடி நகரில் உள்ள சைலி அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களில் கோடநாடு தொடர்பான சில ஆவணங்களும் சிக்கின. அந்த ஆவணங்களைக் கோவை ஐஜி சரக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் கொடுத்ததன் அடிப்படையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. நேற்று ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை முதல் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுக்குட்டி, அவரது உதவியாளர் மற்றும் மகன் அசோக்பாவுவிடம் ஏற்கெனவே விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்
