BREAKING NEWS

ஆதரவாளர் தாக்கப்பட்டதால் ஜெயக்குமார் ஆவேசம்.

அதிமுக தீர்மான ஆலோசனைக் கூட்டத்தின் போது ஜெயக்குமார் ஆதரவாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ‘இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ என்றார்.

`இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்'- ஆதரவாளர் தாக்கப்பட்டதால் ஜெயக்குமார் ஆவேசம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை குறித்துக் கடந்த சில தினங்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருதரப்பிலும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று அக்கட்சியின் தீர்மான குழுக் ஆலோசனைக் கூட்டம் சென்னை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அதிமுகவில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 64 மாவட்டச் செயலாளர்களும், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 11 மாவட்டச் செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் இருதரப்பிலும் காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் மாரிமுத்து என்பவர் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். கூட்டம் முடிந்ததும் ஓபிஎஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “நான் அடிப்படை உறுப்பினராக இருந்து வளர்ந்தவன். கட்சியிலும், ஆட்சியிலும் எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எவ்வளவோ பதவிகளை ஜெயலலிதா அளித்தார். அந்த வகையில் பதவி என்பது எனக்கு முக்கியம் கிடையாது. அடிமட்ட தொண்டனாக இருந்து அதிமுக தொண்டர்களைக் காத்தும், திமுகவின் அவல நிலையை எடுத்துச் சொல்லவும் தயங்க மாட்டேன். அதனால் இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஒட்டு மொத்தமாக மாவட்டச் செயலாளர்களுடைய விருப்பத்தினை கழகத்தினுடைய கூட்டத்தில் எடுத்துச் சொன்னார்கள்.

அது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒற்றையா, இரட்டையா என்பதை தீர்மானிக்க மாவட்டச் செயலாளர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றும் வகையில் 12 பேர் கொண்ட குழு கட்சியில் உள்ளது. இதை முடிவு செய்யும் அதிகாரத்தில் நான் இல்லை” என்றார்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )