ஆறுபாதியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்பாக மக்கள் குறைதீர் முகாம்.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆறுபாதி கிராமம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கலியபெருமாள், கவுன்சிலர் முத்துலட்சுமி ராஜசேகர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஆறுபாதி, விளநகர், பாலவெளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
முகாமில் 2 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், பிறந்தநாள் தேதி மாற்றம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் அட்டை வகை மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, அதில் அட்டை வகை மாற்றம் மனுக்களை வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை செய்திட அனுப்பி வைக்கப்பட்டும், மற்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றம் செய்யப்பட்டு, வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஒப்புதல் ஆணை வழங்கினார்.
வட்ட வழங்க அலுவலர் பாபு கூறுகையில் மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 235 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது. 81 மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.
முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன், தரங்கம்பாடி வட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ், அங்காடி விற்பனையாளர் முத்து, ஜெகதீசன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.