இலங்கை மக்களுக்கு 74 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து இன்று அனுப்பிவைக்கப்பட்டது.

தற்போது கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

இதனிடையே இலங்கை நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில் இனியும் தாமதிப்பது நன்றாக இருக்கது என்ற அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவி புரிந்திடும் வகையில் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப்பொருட்கள், பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்க்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து மத்திய அரசின் அனுமதியை பெற கடந்த ஏப்ரல் மாதம் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே சென்னையிலிருந்து ஒரு கப்பலிலும்,தூத்துக்குடியிலிருந்து ஒரு கப்பலிலும் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் 16 ஆயிரத்து 800 டன் நிவாரண பொருட்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பிவைக்கப்பட்டது. இந்த கப்பலை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

உடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்திலராஜ், தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுதுறை ஆணையர் ஜெசிந்தா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த பொருட்கள் இரண்டு தினங்களில் இலங்கை சென்றடையும்.
