உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி; கனிமொழி எம்பி, அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் (World Population Day) கடைபிடிக்கப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரி செவிலியர் பயிற்சி பள்ளியில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இப்பேரணியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் முன்னிலையில், நடைபெற்ற இந்நிகழ்வில், மருத்துவ ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குநர் பொன் இசக்கி அனைவரையும் வரவேற்று பேசினார். முதலாவதாக பயிற்சி பள்ளியின் மாணவிகள் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர், செவிலியர் பள்ளி ஆசிரியர், மருத்துவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மேலும், மஞ்சள் பையை உக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் மஞ்சள் பையை கனிமொழி எம்பி, அமைச்சர்கள் வழங்கினார்கள். பின்னர், நான்கு சக்கர வாகன ரத பேரணியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், மாணவிகள் 2கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ மற்றும் அரசு மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெப மணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
