கதிகலங்க வைத்த கார் விபத்து! உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாஅத்கள்! துணை ராணுவ கட்டுப்பாட்டில் கோவை!

கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் சட்டவிரோத செயல்களுக்கு திட்டமிட்டு இருக்கலாம் என தகவல்கள் பரவிய நிலையில் கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளும் ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிறன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.
டிஜிபி, ஏடிஜிபி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகளே நேரடியாக களத்தில் இறங்கி விசாரித்த நிலையில், விசாரணையின் அடிப்படையில் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன்),ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு, மர்ம மூட்டைகள், நாட்டு வெடிக்குண்டின் மூல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜமேஷா முபினின் உடல் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்வதற்கு ஜமாஅத்துகள் முன் வரவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
சமூக விரோத செயல்களுக்கு ஜமேஷா முபின் திட்டமிட்டு இருக்கலாம் என தகவல்கள் பரவிய நிலையில் கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளும் ஜமேஷா முபினின் சட்டவிரோத செயலில் ஈடுபட்டது போல தெரிய வந்ததால் அவரது உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை என கூறப்பட்டது
இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையிலேயே கோவை பூ மார்க்கெட் ஜமாத்தில் முபினின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவையில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவத்தினரும் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். பல இடங்களில் கலவர கட்டுப்பாட்டு வாகனமான வஜ்ராவும் நிறுத்தப்பட்டுள்ளது.