கம்யூ., எம்.பி., வெங்கடேசன் தலைமையில் நடந்த பேரணியில் ஹிந்து கடவுள்கள் அவமதிப்பு.

மதுரையில் எம்.பி., வெங்கடேசன் தலைமையில் கம்யூனிஸ்ட், வி.சி.க., திராவிடர் கழகம் சார்பில் நடந்த செஞ்சட்டை பேரணியில் ஹிந்து கடவுள்களை அவமதித்து கோஷம் எழுப்பபட்டது.
இது குறித்து தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் ஹிந்து முன்னணி புகார் செய்துள்ளது.மதுரை பைபாஸ் ரோட்டில் மே 29 ல் நடந்த செஞ்சட்டை பேரணியில் பங்கேற்றவர்களில் சிலர் ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து நேற்றுமுன்தினம் போலீசில் ஹிந்து மக்கள் கட்சி புகார் செய்த நிலையில், நேற்று ஹிந்து முன்னணி பாலரெங்காபுரம் பகுதி தலைவர் கண்ணன், நிர்வாகி மதன் உள்ளிட்டோர் தெப்பக்குளம் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
அதில், ஹிந்து சமுதாயத்தையும், ஹிந்து கடவுள்களையும் இழிவான வார்த்தைகளால் வசைபாடி பாடல்களை பாடியும், கோஷமிட்டும் சிலர் பேரணியில் வந்தனர். குறிப்பாக கடவுள் கண்ணனையும், சுவாமி ஐயப்பனையும் இழிவுபடுத்தினர். கடவுள் முருகனுக்கு நேர்ச்சை செய்யும் சடங்குகளையும் கொச்சைப்படுத்தினர்.
பொதுவழியில் இப்படி பேசி அமைதியான சமுதாயத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் கம்யூனிஸ்ட், வி.சி.க., திராவிடர் கழகம் மீதும், இழிவாக கோஷமிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.