கள்ளக்குறிச்சி மாணவி உடலைப் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்?

கள்ளக்குறிச்சி கனியாமூரில் மரணமடைந்த மாணவியின் தந்தை தாக்கல் செய்ய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி கடந்த 13-ம் தேதி அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் மாணவியின் தந்தை ராமலிங்கம் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. மறு பிரேத பரிசோதனையின் போது மாணவியின் தந்தை மற்றும் அவரது வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தங்கள் சார்பில் ஒரு மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை முறையீடு செய்தார். அதனை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.