கவனத்திற்கு!! கூட்டுறவு வங்கிகள் மூலம் மாதந்தோறும் ரூ.1000.. சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்.

கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் தகுதியான அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில், அரசு சார்பில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. மேலும் இதற்கு விண்ணப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
இந்த திட்டத்தில் பயன் பெறும் மாணவிகள், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாம் தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். மேலும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீ தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இதற்கு தகுதியானவர்கள்.
இந்த திட்டத்தின் கீழ் மாணவிகள், முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே உதவித்தொகை பெற முடியும். அதே போன்று தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை கிடையாது. 2021-2022ஆம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது.
முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாதுஅரசின் வழிக்காட்டு நெறிமுறைகளின் படி இத்திட்டத்திற்கு தகுதியான மாணவிகள், இத்திட்டத்திற்காகவே புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் 910 கிளைகளும் உள்ளன.
கூட்டுறவு வங்கிகளிலும் இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியில் வங்கி சேவை என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகையை கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க, மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்கள் ஆகியோருடன், கூட்டுறவு துறை உயரதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
