கோவையில் பாஜக பந்த் நடத்தினால் நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தேதி கோவையில் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக அரசை கண்டித்து வரும் 31ம் தேதி (திங்கட்கிழமை )கோவை மாநகர பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என மாவட்ட பாஜக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடைவிதிக்க கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத் சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் காவல்துறை அனுமதி அவசியம் என்றும், ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கியதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
எதிர் மனுதாரராக உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில், முழு அடைப்புக்கு மாநில தலைமை அழைப்பு விடுவிக்கவில்லை என்வும், மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்,
மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பை கட்சி தலைமை அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், முழு அடைப்பு நடத்துவதா அல்லது வேறு என்ன வகையான போராட்டம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.