BREAKING NEWS

சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் விதைச்சான்று தஞ்சை உதவி இயக்குனர் தகவல்.

சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்  விதைச்சான்று தஞ்சை உதவி இயக்குனர் தகவல்.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு விவசாயிகள் மும்முரமாக வயல்களை தயார் செய்து வரும் வேளையில் தஞ்சை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பாரூக் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் பற்றிய செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு லாபகரமான பயிர் சாகுபடிக்கும் மிகுதியான மகசூல் பெறுவதற்கும் முக்கியத்துவம் பெற்ற இடுபொருள் தரமான விதைகள் ஆகும் அதிக அளவில் மகசூல் பெறுவதற்கு பண்ணையில் பயிர் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கும் பயன்படுத்தப்படும் விதைகள் தரம் உள்ளதாக இருக்க வேண்டும். தரமான நெல் விதை பயன்படுத்துவதால் 10 முதல் 15 சதவீதம் அதிக விளைச்சல் உறுதி செய்யப்படுகிறது. பருவத்திற்கேற்ற விதை ரகங்கள் பயன்படுத்தும்பொழுது இரகத்தின் மரபுத்திறன் முழுமையாக வெளிப்பட்டு அதிக மகசூல் கிடைப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. சம்பா பருவத்திற்கு ஏற்ற சில நெல் ரகங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

                                                                                                                                                                        1. சிஆர்.1009 சப் 1

இது ஒரு நீண்ட கால பயிர் ரகமாகும். இதன் வயது 150 முதல் 155 நாட்கள். காவிரி டெல்டா போன்ற தண்ணீர் தேங்கும் பகுதிகளில் பயிரிடுவதற்கு ஏற்ற சிறந்த இரகம். நடவு செய்து 15 நாட்கள் வரை நீரில் மூழ்கி இருந்தாலும் அதை தாங்கி வளரக்கூடியது. அரிசி குட்டையாகவும் பருமனாகவும் அதிக அரவை திறனுடனும் முழு அரிசியாக மாற்றும் திறனுடன் இருக்கும். இதன் அரிசி இட்லி தயாரிப்பதற்கு மிகச் சிறந்தது. இந்த ரகத்தை சாவித்ரி நெல் ரகத்திற்கு மாற்று இரகமாக பயிரிட பரிந்துரைக்கப்படுகிறது. பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி உடையது.

 

 

  2. ஆடுதுறை 51

இந்த ரகம் நீண்ட காலப் பயிர் ரகமாகும் . இதன் வயது 155 முதல் 160 நாள் பயிராகும். பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. சாயாத தன்மை உள்ளது. இது மத்திய சன்ன இரகமாகும். இந்த ரகத்தின் அரிசி சாப்பாடு மற்றும் பலகாரத்திற்கு ஏற்றதாகும்.

 

 3. ஆடுதுறை 54
இது ஒரு மத்திய கால ரகம் ஆகும். இதன் வயது 140 முதல் 145 நாட்கள் ஆகும். இது மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி ரகத்திற்கு மாற்றாக தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறையால், சமீபகாலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அரிசி அதி சன்ன வகையைச் சேர்ந்தது.

 

                                                                                                                                                                                 4. கோ ஆர் 50
இது மத்திய கால ரகம் ஆகும். இதன் வயது 130 முதல் 135 நாட்கள் ஆகும். இந்த ரகம் சம்பா, பின் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு ஏற்ற ரகமாகும். இந்த ரகம் குலைநோய், இலை உறை அழுகல், இலைப்புள்ளி நோய், பாக்டீரியா இலைக்கருகல் மற்றும் துங்ரோ ஆகிய நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி உடையது. இதன் அரிசி மத்திய சன்ன வகையைச் சேர்ந்தது. களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற இது சாயாத தன்மை கொண்டது.

 

 


                                                                                                                                                                              5. திருச்சி 3
இது மத்திய கால இரகம் ஆகும். இது 130 முதல் 135 நாட்கள் பயிராகும்.களர் நிலங்களுக்கு ஏற்றது. இலைப்புள்ளி , இலை உறை அழுகல் மற்றும் இலை உறை கருகல் ஆகிய நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி உடையது. இதன் அரிசி மத்திய மத்திம குண்டு வகையை சார்ந்தது.இட்லி தயாரிப்பதற்கு தகுந்த இரகமாகும். ஆகவே விவசாயிகள் பருவத்திற்கு ஏற்ற தரமான விதைகளை பயன்படுத்தி விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )