BREAKING NEWS

சிதம்பரத்தில் மறியல் போராட்டம் நடத்திய 25 தீட்சிதர்கள் மீது வழக்கு.

சிதம்பரத்தில் மறியல் போராட்டம் நடத்திய 25 தீட்சிதர்கள் மீது வழக்கு.

கடலூர்;

சிதம்பரத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக 3 தீட்சிதர்களை போலீஸார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 25 தீட்சிதர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது குழந்தை திருமணங்கள் நடத்தியது தொடர்பான புகார்கள் அவ்வபோது வருகின்றன.

 

ஏற்கெனவே வந்த 2 புகார்களின் பேரில் 5 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்குகள் தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதற்கிடையே, மற்றொரு குழந்தை திருமணம் நடந்தாக வந்த புகாரின் பேரில் கடந்த 15-ம் தேதி மாலை, சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர், வினோபாலா தீட்சிதர், மற்றும் அவரது 17 வயது மகனான மற்றொரு தீட்சிதர் ஆகிய 3 பேரையும் கடலூர் மாவட்ட டெல்டா போலீஸார் கைது செய்து விசாரணைக்காக கடலூருக்கு அழைத்து சென்றனர்.

 

இதைக் கண்டித்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கீழ சன்னிதி அருகே கீழ வீதியில் தரையில் அமர்ந்து இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பாஜகவினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

இந்நிலையில் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 25 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தீட்சிதர்களுக்கு ஆதரவாக மறியலில் பங்கேற்ற சிதம்பர நகர பாஜக தலைவர் ஜெயக்குமார், பாஜக முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாநில பொதுச் செயலாளர் கேப்டன் பாலசுப்ரமணியன், சிதம்பரம் நகர செயலாளரான பல் மருத்துவர் சௌந்தரராஜன் ஆகியோர் மீதும் சிதம்பரம் நகர காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, கூட்டமாக சேர்ந்து தடையை மீறி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )