சிறுகனூரில் உரிமையாளரை கட்டி போட்டு 30 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள்.

செய்தியாளர் – சூ.வினோத்குமார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள ஆட்டுப்பட்டியில் படுத்திருந்த ஆட்டின் உரிமையாளரை கட்டி போட்டு முப்பது ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள குரும்ப தெருவை சேர்ந்தவர் 55 வயதான ராமர். இவர் 70க்கும் மேற்பட்ட செம்மரி ஆண்டுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் சிறுகனூர் திருப்பட்டூர் சாலையில் உள்ள பெண்கள் விடுதியின் பின் புறத்தில் ஆட்டு பட்டி அமைத்து இரவில் ஆடுகளை அங்கு கட்டி பாதுகாத்து வருகிறார்.
மேலும் ஆடுகளை பாதுகாக்க அங்கேயே கட்டில் போட்டு படுத்துக் கொள்வார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அவரை அடித்து கட்டிப்போட்டுவிட்டு முப்பது ஆடுகளை திருடி சென்றனர்.
காலில் வீக்கம் ஏற்பட்டு மயக்கத்தில் இருந்த ராமர் நீண்ட நேரத்துக்கு பிறகு அப்பகுதியில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.