செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட 90 ரேஷன் கடைகளுக்கு செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த கிடங்கில் இருந்து கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பணியை இன்று தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்தும், சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து, தரமான அரிசிகள் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்தார். நடப்பு மாதத்திற்கு 50 சதவீதம் சன்ன அரிசியும், 30 சதவீதம் குண்டு அரிசியும், 20 சதவீதம் பச்சரிசியும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் சனிக்கிழமை அன்று செம்பனார்கோயில் ஒன்றியம், ஆறுபாதி கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என்றும், மேற்படி முகாமில் விளநகர் மற்றும் ஆறுபாதி கிராம பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், செல்போன் எண் மாற்றுதல், முகவரி மாற்றம் மற்றும் பெயரில் உள்ள திருத்தங்கள், எழுத்துப் பிழைகள் ஆகியவற்றினை நேரடியாக முகாமில் கலந்து கொண்டு சரி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். கிடங்கு ஆய்வின்போது தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராகவன், எழுத்தர் மணிகண்டன், நகர்வு எழுத்தர்கள் பிரதீப், வித்யாசாகர் ஆகியோர் உடனிருந்தனர்.