தஞ்சை வடக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம். கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். தஞ்சை வடக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம். கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் க.நசீர்அகமது தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். கல்யாணசுந்தரம் பேசுகையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும்.
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். உட்கட்சி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஒன்றிய செயலாளர்கள் 2 மாதத்துக்கு ஒரு முறையாவது கூட்டங்கள் நடத்தி, நோட்டுக்களில் பதிவு செய்யவேண்டும் எனத் தெரிவித்தார்.
2-வது முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்துக் கொள்வது, ஒன்றிய, மாநகர, பேரூர் மற்றும் ஊராட்சி கிளைக் கழக கூட்டம் நடத்துவது, கட்சி கொடியேற்றுவது, அரசின் சாதனை விளக்கக் கூட்டம் நடத்துவது,
2 மாதங்களுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டமும், மாதம் ஒரு முறை செயற்குழு கூட்டம் நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் கோவி அய்யாராசு, ஜெயலட்சுமி நடராஜன், மாவட்ட பொருளாளர் நடராஜன், மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன் மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன் நன்றி கூறினார்.