தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.
நாகப்பட்டினம் மாவட்டம், கடந்த 17.12.22 அன்று சேலத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் 5-கட்ட இயக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.
27.12.2022 செவ்வாய்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம், 10.02.2023 மாவட்ட அளவிலான கோரிக்கைப் பேரணி, 28.03.2023 அன்று இலட்சக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், இதற்கு பின்னரும் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இலட்சக்கனக்கான ஊழியர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகைப் போராட்டம் ஆகிய இயக்கங்களை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன் முதற்கட்டமாக….
CPS என்கிற புதிய ஓய்வூதிய திட்டத்தை ஒழித்து அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்கிட வேண்டும், ஒப்பந்தம், புற ஆதார முகமை (Out Sourcing) முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
அரசாணை எண்கள் : 115, 139, 152 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், MRB செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குபவர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்,
ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்கிட வேண்டும், தமிழக அரசுத் துறைகளில் உள்ள சுமார் 6-லட்சம் பணியிடங்களை முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ( 27.12.22 ) காலை நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாகை வட்டத் தலைமை கே.இரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டச் செயலாளர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட் விளக்கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் பா.ராணி, போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன மண்டல பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.இராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் நிறைவுரையாற்றினார். வட்டப் பொருளாளர் சி.கலியபெருமாள் நன்றியுரையாற்றினார்.
நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகம், தொழிற்பயிற்சி மையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.