தரங்கம்பாடி, தலைச்சங்காட்டில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்பாக மக்கள் குறைதீர் முகாம்…

மயிலாடுதுறை மாவட்டம்,உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையர் அவர்களால் ஆணையிடப்பட்டது. ஆணை தொடர்பாக இன்று தரங்கம்பாடி வட்டம் தலைச்சங்காடு கிராமம், கிராம ஒற்றுமை சங்க கட்டடத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரூபன் கரிகாலன் முன்னிலை வகித்தார். மேற்படி முகாமில் 12 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், பிறந்தநாள் தேதி மாற்றம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றம் செய்யப்பட்டு, வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஒப்புதல் ஆணை வழங்கினார். மேற்படி முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலகிருஷ்ணன், கவுன்சிலர் கண்ணன், தனி வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ், பொறியாளர் ஐயப்பன், அங்காடி விற்பனையாளர் தண்டபாணி, கிராம உதவியாளர் ரம்யாகனோஜ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
