BREAKING NEWS

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் ஆண்டு விழா.

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் ஆண்டு விழா.

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் 13வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவ மாணவியரின் முன்னிலையில் கல்லூரியின் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் தனது வரவேற்புரையில் தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு எம்.எல்.ஏ பரிந்துரையின் பேரில் ஏற்கனவே நமது கல்லூரியில் இயங்கி வந்த பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்சி கணிதவியல் போன்ற பாடப்பிரிவுகள் உடன் கூடுதலாக எம்.காம்,எம்.ஏ. ஆங்கிலம் போன்ற முதுகலை பாடப் பிரிவுகளும் பி.ஏ.தமிழ் இளங்கலை பாடப் பிரிவும் இந்த கல்வியாண்டு முதல் துவங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.

மேலும் அவர் கூறுகையில் நமது கல்லூரியில் மாணவ மாணவியருக்கு இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு மத்திய அரசின் கணினி மேம்பாட்டு திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்து துறை அலுவலகத்தின் கீழ் டி என் பி எஸ் சி போன்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது என குறிப்பிட்டு பேசினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் திசையன்விளை வியாபாரிகள் சங்க உறுப்பினரும், தொழிலதிபருமான விஜேஸ்குமார் மற்றும் அப்புவிளை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியரும், பபிசா அறக்கட்டளையின் இயக்குனருமான அருள்தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் தங்களது சிறப்புரையில் தம் சிறுவயதில் பட்ட கஷ்டங்களை எடுத்துக்கூறி ஏழ்மை நிலையிலிருந்து தங்களது விடாமுயற்சி மற்றும் நேர்மை காரணமாக சிறப்பான வெற்றியை வாழ்வினில் பெற்று இன்று இந்த அரங்கத்தில் சிறப்பு விருந்தினராக இருக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளதாக தெரிவித்தனர். அதேபோல் கல்லூரி மாணவர்களும் தங்களது எதிர்கால வாழ்வில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினர்.

நிகழ்ச்சியின் முன்னதாக மாணவ மாணவியருக்கு பல்வேறுவிதமான திறன் சார்ந்த போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் தமிழ் துறை தலைவி முனைவர் தணிகைச் செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கணிதவியல் துறை பேராசிரியர் டாக்டர் ரவி நாராயணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் ராமச்சந்திரன், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் டாக்டர் சந்திரசேகர், கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவி டாக்டர் ஜெயஸ்ரீ, கணிதவியல் துறை தலைவர் ராஜேஷ், ஆங்கில துறை பேராசிரியை அபிராமி, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் யுகேஷ் ,கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்க அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )