திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் உள்ளது இந்த நிறுவனத்தில் 8,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் நீண்ட காலமாகவே கால்நடைகள் சுற்றி வருகிறது.
இதனால் குழந்தைகள் பெரியவர்கள் நாய் கடிகளுக்கு உள்ளாகி உள்ளனர் மேலும் ஆடு மாடுகள் வாகன ஓட்டிகளை விரட்டி முட்டி தள்ளியதில் சிலர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து குடியிருப்பு வாசிகளும், பெல் ஊழியர்களும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை கால்நடைகளை பிடிப்பதற்கு எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுரேஷ்குமார் தனது மகன் மற்றும் மகளை அழைத்துக் கொண்டு டியூசன் விடுவதற்காக சென்றுள்ளார். அப்போது மாடு முட்டியதில் சிறுவன் ஜஸ்வந்த் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்.
இதனை எடுத்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கால்நடைகளின் இத்தகைய செயலால் ஆத்திரமடைந்த பெல் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பெல் நிர்வாகத்தை கண்டித்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் வட்டாட்சியர், பெல் நிர்வாகத்தினர் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் கால்நடைகளை பிடித்து அடைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் கால்நடைகளை பிடிக்கும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபடும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு சென்றனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தினால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.