திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் சிறுமியை கேலி, கிண்டல் செய்த எலக்ட்ரிஷனை சிறுமியின் தந்தை, தாய் மாமன், வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் கரம்பவிளை சேர்ந்த சுடலைமணி மகன் ராஜ்(40). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் வீரராகவபுரம் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன்(32). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். கண்ணன் அந்தப் பகுதியில் செல்லும் சிறுமிகளை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.

அதேபோல் கடைக்குச் சென்ற ராஜ் மகளை கேலி கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராஜ் தனது மைத்துனன் ராஜ வடிவேல்(எ) இயேசுவுடன் சென்று கண்ணனிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். ஆனால் கண்ணன் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனையடுத்து வீடு திரும்பியுள்ள ராஜ் கோவில் காவல் நிலைய போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கண்ணன், ராஜ் ஆகியோரை காவல் நிலையத்திற்கு காலையில் வரும்படி தெரிவித்து விட்டு சென்றனர். இந்த நிலையில் கண்ணன் நள்ளிரவில் ராஜியிடம் தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜ் தனது மைத்துனர் ராஜவடிவேல் (எ)இயேசு ஆகியோர் கண்ணனை சராமரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார்.


சம்பவ இடத்திற்கு வந்த கோவில் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த கண்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.
