தேனி அருகே 180 கிலோ புகையிலை குட்கா, 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் 180 கிலோ புகையிலை குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருவதாக குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலின் பேரில் சின்னமனூர் பகுதியில் ஆய்வு செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர் புதுக்கிணறு தெரு பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்பொழுது அவரது வீட்டில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 180 கிலோ பான், குட்கா,புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணம் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து முத்துராஜ் (34) என்பவரை பிடித்த குற்றப்பிரிவு காவல்துறையினர் அவருடன் சேர்ந்து அவரது கூட்டாளிகள் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (37) மற்றும் நந்தகுமார்(31) ஆகியோரையும் பிடித்து சின்னமனூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்பு சின்னமனூர் காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 180 கிலே பான், குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்க பணம் 21 லட்சத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.