பகல் கொள்ளையால் பரிதவித்த குடும்பம்..!! மாவட்டம் தாண்டிய கொள்ளையனை மடக்கிப் பிடித்த போலீஸ்..!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகன் கோவிந்தராஜ். இவரது வீட்டில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, பட்டப் பகலில் கதவை உடைத்து 25-சவரன் நகைகளை இரண்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில், காவல் துணை கண்காணிப்பாளர் திரு ஆரோக்கிய ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய வீட்டிற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், மேட்டூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மற்றும் அவருடைய நண்பருடன் சேர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கார்த்திகேயனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 13 சவரன் நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை பூலாம்பட்டி தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் கூறியதாவது தனிப்படை போலீசார் இரவு பகல் பாராமல் பணிபுரிந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை கூடிய விரைவில் கைது செய்யப்படும் என காவல் துணை கண்காணிப்பாளர் திரு ஆரோக்கியராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.