பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தரப்பின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் நினைவிட பொறுப்பாளரிடம் பேச்சுவார்த்தை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது.
இந்த நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அதிமுக சார்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் அணிவித்தார்.
அந்த தங்க கவசம் அதிமுக பொருளாளர் மற்றும் நினைவாலய பொறுப்பாளர்கள் இருவரின் ஒப்புதலோடு வங்கியில் வைக்கப்பட்டு குருபூஜை நடக்கும் சில நாட்களுக்கு முன்பு எடுத்து வரப்பட்டு பின்னர் குருபூஜை முடிந்தவுடன் வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
2014 ஆம் ஆண்டு அதிமுக பொருளாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் ஆகியோரின் பொறுப்புகளோடு வங்கியில் வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால் எடப்பாடி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பு தங்க கவசத்தின் பொருளாளர் பதவிக்கு வங்கி நிர்வாகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் உட்பட கட்சி நிர்வாகிகள் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்பு தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் தங்ககவசம் எடுத்துவருவது சம்மந்தமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
காலை எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் நினைவிட பொறுப்பாளர் இடம் தங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.