பெங்களூருவிலிருந்து சொகுசு காரில் தஞ்சை வந்த குட்கா.
பெங்களூருவிலிருந்து சொகுசு காரில் தஞ்சை வந்த குட்கா.
பெங்களூரூவில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட குட்கா மற்றும் கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 டன் எடையிலான குட்காவை பறிமுதல் செய்த தஞ்சாவூர் போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் காவல் சரகத்தில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்களான குட்கா, பான்மசாலா அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தஞ்சாவூர் காவல் சரக டிஐஜி ஏ.கயல்விழிக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து தனிப்படைகள் அமைத்து குட்கா வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறார். கடந்த வாரத்தில் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை திருத்துறைப்பூண்டியில் மடக்கி பிடித்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குட்கா பொருட்கள் குறித்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை, தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது.