பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 22-ம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையாறு ராஜம்பாள் தெருவில் எழுந்தருளியிருக்கும் செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 22 ஆம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
ஆலயத்திலிருந்து கொடி ஊர்வலம் புறப்படும்போது சந்தனகுடம், குதிரை வண்டியில் கொடி ஊர்வலம் அதனை தொடர்ந்து மிக்கல் ஆண்டவர், தேவமாதா, குழந்தை ஏசு, செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சுருவங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், கேரளா செண்டை மேளம் முழங்க நாட்டிய குதிரைகளுடன் விமர்சையாக ஊர்வலம் நடைபெற்றது.

பக்தர்கள் மாலை அணிந்து 60 நாட்கள் விரதம் இருந்து சிகப்பு உடை அணிந்து தங்களது நேர்த்திக்கடன் நிறைவு செய்யும் வகையில் பெண்கள் புடவை பழவகைகள், இனிப்பு வகைகள், வலையல்கள், தென்னை கன்று உள்ளிட்ட பொருட்களுடன் சீர்வரிசை எடுத்து முன் வரிசையில் செல்ல பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். ஆண் பக்தர்கள் செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் சுருவத்துடன் ஊர் வலமாக நாதஸ்வரம், பேண்டு வாத்தியங்கள், கேரளா செண்டை மேளம் முழங்க,
ராஜம்பாள் தெரு, மெய்தீன் மரைக்காயர் தெரு, வேப்பமரத்தெரு, நாடார் காளியம்மன் கோவில் தெரு, பார்வதி அம்மன் கோவில் தெரு வழியாக ஊர்வலம் சென்று ஊர்வலம் ஆலயத்தை அடைந்ததும் பகல் 1 மணி அளவில் ஆலய நிர்வாகி மைக்கேல்ராஜ் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.
