BREAKING NEWS

ராஜபாளையம் நகராட்சியில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நகராட்சி தலைவர் கூட்டத்தை உடனடியாக நிறைவு செய்தார்.

ராஜபாளையம் நகராட்சியில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நகராட்சி தலைவர் கூட்டத்தை உடனடியாக நிறைவு செய்தார்.

விருதுநகர் மாவட்டம்: ராஜபாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நகராட்சி தலைவர் பவித்ரா ஷ்யாம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 42 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

 

மொத்தம் 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை குறைக்க முயற்சி செய்த நகராட்சி தலைவர் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தனர்.

துணைத் தலைவர் கல்பனா பேசும்போது தன்னுடைய 32 வது வார்டில் இருந்த பொது கழிப்பறை சேதம் அடைந்து உள்ளதாகவும் சுற்றி முள் புதர்கள் அதிகம் வளர்ந்திருப்பதால் ஒருவர் பாம்பு கடித்து இறந்திருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

 

எனவே புதிய கழிப்பறை கட்டி தர கோரி ஆறு மாதங்களாக வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நகராட்சி ஆணையர் மீது குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் மட்டுமே புதிய கழிப்பிடம் கட்ட முடியும் என தெரிவித்தார். இது குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் தர கோரி துணைத்தலைவர் ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து பேசிய அதிமுக 4 வது வார்டு உறுப்பினர் மீனாட்சி தன்னுடைய வார்டில் சுகாதார பணிகள் முறையாக செய்யப்படுவதில்லை எனவும், குடிநீரில் சாக்கடை கழிவுகள் கலப்பதற்கு தற்காலிக தீர்வு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிரந்தர தீர்வு தேவை எனவும் கூறினார்.

 

அப்போது திமுக கவுன்சிலர்கள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதே நேரத்தில் கண்டனம் தெரிவித்த திமுக கவுன்சிலர்களை மற்ற திமுக கவுன்சிலர்கள் கண்டித்ததால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

 

வாக்குவாதத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நகராட்சி தலைவர் கூட்டத்தை உடனடியாக நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறினார்.

ம.வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.

CATEGORIES
TAGS