வறுமையால் மீன்பிடிக்க சென்ற சிறுவன் பலி!!

குடும்ப வறுமை காரணமாக 15 வயது சிறுவன் மீன்பிடிக்கச் சென்று கடலில் விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் உயரத்தெருவைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி சகாய பிரான்சிஸ். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் 2 பெண், 4 ஆண் என 6 குழந்தைகள் உள்ளனர். எதிர்பாராத விதமாக சகாய பிரான்சிசும், அவரது மனைவியும் உடல்நிலைக் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் வருமானமின்றி குடும்பம் வறுமையில் தத்தளித்தது.

இதனால் அவரது இளைய மகன் ரோகித் டோனி என்ற 15 வயது சிறுவன் குடும்பத்தின் வறுமையை போக்க தந்தை செய்து வந்த மீன்பிடி தொழிலை செய்ய முடிவு செய்தார். சிறு வயது என்பதால் இந்த தொழிலை செய்ய முடியாது என்று குடும்பத்தினர், உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் எடுத்து சொல்லியும் ரோகித் டோனி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் மீன்பிடி தொழிலை செய்து கொண்டிருந்த ரோகித் டோனி சில காலமாக வீட்டில் உள்ள அனைவரையும் கவனித்து வந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீன்பிடி தொழிலாளர்களுடன் இணைந்து ரோகித் டோனி, மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருக்கிறார். அவருடன் 4 வடமாநில தொழிலாளர்கள் உள்பட 18 மீன்பிடி தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டனி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இவர்கள் அனைவரும் கடலுக்கு சென்றுள்ளனர்.
இவர்களின் படகு முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தூரத்துல் செல்லும்போது ரோஹித் டோனி மீன் பிடிப்பதற்காக வலையை கடலில் வீசியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமான ரோகித் டோனி நிலை தடுமாறி கடலுக்குள் தவறி விழுந்துள்ளான்.

இதைப்பார்த்து பதறிப்போன உடன் சென்ற மீன்பிடி தொழிலாளர்கள் உடனடியாக கடலுக்குள் குதித்து ரோகித் டோனியை தீவிரமாக தேடினர். இருப்பினும் அவன் கிடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று மாலை ரோகித் டோனியின் சடலம் கடலில் மிதந்து வந்துள்ளது. அதனை கைப்பற்றிய குளச்சல் கடல் போலீசார் ஆசாரப்பள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவன் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் வறுமையை போக்கி அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமந்த ரோகித் டோனி, இவ்வளவு சிறு வயதிலேயே இறந்த சோகம் அப்பகுதியினரை சூழ்ந்துள்ளது. தாய், தந்தை இருவருமே உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். உடன் இருந்த சகோதரனும் துரதிருஷ்டவசமாக இறந்த நிலையில் சகாயபிரான்சிசின் 5 குழந்தைகளும் சோகத்திலும் பசி பட்டினியிலும் தவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
