விஜயகாந்த் உடல்நலன் குறித்து பொய் தகவல்: 2 யூடியூப் சேனல்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் தேமுதிக பரபரப்பு புகார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி இன்று புகார் அளித்துள்ளார். அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பிய இரண்டு யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 5 நாட்களுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து விரல்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என அன்றைய தினமே கட்சியின் தலைமை கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டதாகவும் கூறினார்.. ஆனால் குறிப்பிட்ட இரண்டு யூடியூப் சேனல்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டதாகவும், உண்மைக்குப் புறம்பான இந்தச் செய்தியால் கட்சித் தொண்டர்கள் பதற்றம் அடைந்து தன்னையும், கட்சி தலைமை அலுவலகத்தையும் அணுகியதால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
ஊடக சுதந்திரம் என்பது உண்மையான செய்திகளை வெளியிடுவதே. இதுபோன்ற குழப்பத்தை உருவாக்கி மக்களிடையே பதற்றத்தை அதிகரிக்கும் செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. எனவே, தவறான செய்தி வெளியிட்ட இரண்டு யூடியூப் சேனல்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
