விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கல்!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகிரி என்கிற பகுதியில் , மறைந்த கே. வெங்கடேஸ்வரலு என்பவரின் மனைவி, காஞ்சர்ல பத்மா வசித்து வந்தார் . இவருக்கு வயது 58 . கடந்த ஞாயிற்றுக்கிழமை, சித்தூர் அருகே பலமனேர் பகுதியில் சாலை ஓரமாய் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஆட்டோ ஒன்று அவர் மேல் மோதி விபத்துக்குள்ளானார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் காலை சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை இவர் மூளை சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து, இவரது ஒரே மகள் திருமதி எம். கிருஷ்ணப்ரியா மற்றும் உறவினர்கள் இவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இவருடைய இதயம் மற்றும் நுரையீரல் எம்ஜிஎம் மருத்துவமனை சென்னைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சிஎம்சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மியாட் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இவ்வாறு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரைஜாஸ்பர் விடுத்துள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.