வேப்பூர் அருகே வாழைத்தார் வியாபாரி கீழே விழுந்து விபத்து: சாலையின் நடுவே வந்த குரங்கால் விபரீதம்.

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட் ரோடு கடலூர் சேலம் நெடுஞ்சாலையின் அருகில் ஆவின் பாலகம் உள்ளது, அதன் அருகாமையில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் பல உள்ளன. இப்பகுதியில், குரங்குகள் தொல்லை, மற்றும் சாலையின் ஓரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனத்தாலும் சாலையில் பயணிக்க கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
குறிப்பாக இதனால் இன்று காலை குள்ளஞ்சாவடியில் இருந்து டிவிஎஸ் எக்ஸெல் பைக் மூலம் வேப்பூர் பழக்கடைகளுக்கு வாழைத்தார் கொண்டு வரும் வியாபாரி ஒருவர் வந்து பொழுது, குரங்கு கூட்டங்கள் சாலையின் நடுவே வந்ததால் குரங்கின் மீது விடாமல் இருக்க வளைந்து செல்ல முடியாமலும், போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டோரம் நின்ற வாகனத்தால் வளைக்க முடியாமலும் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.
அவருக்கு தலை, முழங்கால், உடலில் அனேக இடங்களில் பலத்த அடிபட்டது. வலியால் அலறி அடித்து துடித்துக் கொண்டிருந்தார். அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் , இளைஞர்கள் அவரை மீட்டு ஆசுவாசப்படுத்தி வேப்பூர் காவல் நிலையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து பின்னர் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் ,தினமும் இப்பகுதியில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த குரங்குகளை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.