BREAKING NEWS

வேலூர் மாவட்டத்தில் கருவேப்பிலை கட்டுக்குள் ஐம்பொன் சிலை கடத்தல் சாதுர்யமாக மடக்கிப் பிடித்த காவல்துறை!

வேலூர் மாவட்டத்தில் கருவேப்பிலை கட்டுக்குள் ஐம்பொன் சிலை கடத்தல் சாதுர்யமாக மடக்கிப் பிடித்த காவல்துறை!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அரியூர் காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில், கட்டை பையில் கருவேப்பிலைகளுக்கு இடையே மறைத்து கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை சாதுர்யமாக விரட்டிப் பிடித்த காவல் துறையினர் இரண்டு பேரையும் பிடித்து கைது செய்தனர்.

 

வேலூர் மாவட்டம், அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீசார், நேற்றுமுன்தினம் இரவு மலைக்கோடி பகுதியில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சிலர் சிலையை கடத்திச் சென்று விற்பனை செய்ய முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

 

தகவலின் பேரில் பள்ளிகொண்டா செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவரிடம் போலீசார் திடீரென விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததோடு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

 

 

இதனை தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற காவல்துறையினர் சாத்துமதுரை அருகே அவர்களை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பையை பறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் காய்கனி எடுத்துச் செல்வது போல கருவேப்பிலைகளுக்கு மத்தியில் சிலை ஒன்றை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து சிலையை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதை வாங்கி ஆய்வு செய்தனர். ஆய்வில் அது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து சிலையை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் 43), கண்ணன் (42) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சிலையை கடத்தி வந்ததும் அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அரியூர் காவல் துறையினர். பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார் .

 

CATEGORIES
TAGS