150 சடலங்களை அடக்கம் செய்த எஸ்.எஸ்.ஐ., ஏட்டுக்கு தஞ்சையில் பாராட்டு.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றும் மனோகரன், 51, கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றும் ரகுநாதன், 45, ஆகியோர், மூன்று ஆண்டுகளாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அனாதையாகும் சடலங்களை நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில், தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி பிணவறையில், 32 சடலங்கள், அடையாளம் தெரியாமலும், உரிமை கோரப்படாமலும் இருந்தது.
‘சடலங்களுக்கு யாரும் உரிமை கோராவிட்டால், ஒரு வாரத்தில் அடக்கம் செய்யப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. யாரும் உரிமை கோராததால், எஸ்.எஸ்.ஐ., மனோகரன், ஏட்டு ரகுநாதன் இருவரும் சேர்ந்து, 32 சடலங்களையும் ஆம்புலன்சில், சாந்திவனம் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று, இறந்தவர்களுக்கான சடங்குகளை முறையாக செய்து, அடக்கம் செய்தனர்.
அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மனோகரன் கூறியதாவது:
மருத்துவக் கல்லுாரி போலீஸ் ஸ்டேஷனில் பணிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், போலீஸ் ஏட்டு ரகுநாதனுடன் சேர்ந்து சொந்த செலவில், 150க்கும் மேற்பட்ட அனாதை சடலங்களை அடக்கம் செய்துள்ளோம்.
மன்னார்குடியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனமும், அடக்கம் செய்வதற்கு உதவி செய்துள்ளது. நாங்கள், இதனை ஒரு சேவையாக கருதி செய்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.