4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு பத்தாண்டுகள் சிறை.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரசங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (42) அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை பாலாற்றின் அருகே கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு நேற்று செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்திற்கு இறுதிகட்ட விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் முனியாண்டி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.