50 ஆண்டுகளுக்கும் மேல் சாலை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகிறோம். பட்டுக்கோட்டை அருகே ஆண்டிவயல் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆண்டிவயல் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த 18 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வளரும் தமிழகம் கட்சி மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் விவேகானந்தன் தலைமையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஆண்டிவயல் கீழத்தெருவில் 18 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி கிடையாது. வயல்வெளிகளின் வரப்பில்தான் நடந்து செல்லும் நிலை உள்ளது. யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்பட்டால் மிகுந்த சிரமத்திற்கு இடையேதான் வயல்வெளியை கடந்து வர வேண்டி உள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதம் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் திரும்பி வரும் போதும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர். இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதிலும் சிரமம் உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு உடன் சாலை வசதியை செய்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
