BREAKING NEWS

70 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

70 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

கள்ளக்குறிச்சி அருகே எலவடி என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற செயலாளராக இருக்கக்கூடிய நபரொருவர் அவர் பணிபுரியும் கடந்த நான்கு ஆண்டு காலத்தில், 70 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது எலவடி என்ற கிராமம்! இந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற செயலாளராக ராஜா என்பவர் கடந்த 2019 முதல் தற்போது வரை பணிபுரிந்து வருகிறார். இந்த காலகட்டத்தில் ஊராட்சி செயலாளர் ராஜா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து எலவடி கிராமத்தில் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் பைப்லைன் அமைத்தல், தெருவிளக்குகள் அமைத்தல், குடிநீர் குழாய் பராமரிப்பு, மின் மோட்டார்கள் பராமரிப்பு, ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் பராமரித்தல், அரசின் இலவச வீடு கட்டும் திட்டம் போன்ற பல திட்டங்களின் வாயிலாக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூபாய் 70 லட்சத்திற்கு மேல் ஊராட்சி செயலாளர் ராஜா கையாடல் செய்துள்ளார் என்று புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக எலவடி கிராமத்தின் துணை கிராமமான பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருடைய மகன் பாஸ்கரன் என்ற சமூக ஆர்வலர், எலவடி கிராம ஊராட்சி மன்ற செயலாளர் ராஜா மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபுவிடம் நேரில் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவில் எலவடி கிராம பஞ்சாயத்து செயலாளர் ராஜா என்பவர், கிராம வளர்ச்சித் திட்டப் பணிகள் என்ற பெயரில் சுமார் 70 லட்சத்திற்கு மேல் தொகையை கையாடல் செய்துள்ளார் என்றும், ஊராட்சி கணக்குப் புத்தகத்தில் போலியான கணக்குகளை எழுதி வைத்துள்ளார் என்றும்,எலவடி கிராம ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தங்களது சுயலாபத்திற்காக எலவடி கிராம ஊராட்சி நிதியில் கையாடல் செய்துள்ளார்கள் என்றும், ஊராட்சி செயல்களை கண்காணிக்கக் கூடிய அதிகாரிகளான வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தணிக்கை அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் போன்ற அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இவர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், எனவே எலவடி கிராம ஊராட்சியில் புகாரில் உள்ள படி ஆய்வு செய்து தணிக்கை செய்து மறு தணிக்கைக்கு உட்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் புகார் அளித்துள்ள நபர் பாஸ்கரன் எலவடி கிராம பஞ்சாயத்தில் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட செலவினங்கள் செயல்பாடுகள் குறித்த அனைத்து தகவல்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று அதில் உள்ள முறைகேடுகளை கண்டுபிடித்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார். இதன் அடிப்படையிலேயே புகார் அளித்து இருப்பதாகவும் கூறுகிறார். இது சம்பந்தமாக எலவடி கிராம ஊராட்சியில் பணிபுரியும் கிராம ஊராட்சி செயலாளர் ராஜா என்பவரிடம் கேட்டபோது இது முற்றிலும் தவறு தவறான தகவல் என கூறுகிறார்.எலவடி கிராம பஞ்சாயத்தில் ஊராட்சி செயலாளர் ராஜா என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள்ளாக ரூபாய் 70 லட்சம் வரையில் முறைகேடு செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புகார் அளித்துள்ள நபர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் அப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பட்சத்தில் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து அதற்கான பரிகாரத்தை தேடுவோம் என கூறி வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )