அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம்

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட விளைச்சல் நல்ல மகசூல் கிடைக்கவும், தங்களது விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ள ஆடு, மாடுகள் பூரண நலத்துடன் விளங்கவும் வேண்டிக் கொண்டு, ஆண்டு திருவிழாவின் போது தங்களது வயலில் விளைந்த தானியங்களையும், ஆடு, மாடுகளையும் காணிக்கையை செலுத்துவது வழக்கம். இதனால் இக்கோவில் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர், நாகை, சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்களின் பிரார்த்தனை தளமாக இக்கோவில் விளங்குகிறது.
இச்சிறப்பு பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 17ஆம் தேதி ஸ்ரீராமநவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்தாம் நாள் திருவிழாவான வெள்ளி கருட சேவையை தொடர்ந்து, ஏழாம் நாள் திருவிழாவான திருக்கல்யாணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெருந்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேரில்அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் தேரில் காட்சி அளித்தார்.
பல்லயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்கதர்களின் வசதிக்காக திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கும்பகோணம், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.