இல்லம் தேடி மருத்துவத்தில் 75 லட்சம் பேருக்கு மருத்துவப் பெட்டகம்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இன்று இரும்பாலை பிரதான சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு வந்த அமைச்சரைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திற்குள் சென்ற அமைச்சர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து போதிய மருந்து இருப்பு, தடுப்பூசி இருப்பு ஆகியவற்றையும் ஆய்வு செய்ததோடு மருத்துவமனை சார்பில் பராமரிக்கப்படும் ஒவ்வொரு பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட வேண்டும். என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் செவிலியர்கள் மற்றும் மருத்துவரிடம் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து சர்வதேச யோகா தினத்தையொட்டி, சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கல்லூரி மாணவ-மாணவியருடன் இணைந்து யோகப் பயிற்சியில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிசம் பேசிய அவர், தமிழகத்தில் கடைக்கோடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களைசெயல்படுத்தி வருவதாகவும், தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 75 லட்சம் பேருக்கு அவர்களுடைய வீடுகளுக்கே தேடிச் சென்று மருத்துவப் பெட்டகம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
