உடுமலை ஆதார் சிறப்பு திருத்த முகாம் துவக்கம்: வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில், ஆதார் சிறப்பு திருத்த முகாம் நேற்று துவங்கியது. வார்டு வாரியாக, வரும், 30ம் தேதி வரை நடக்கிறது.உடுமலை நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளிலும், அஞ்சல் துறையுடன் இணைந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது.நேற்று, ருத்ரப்ப நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 26, 27, 28, 29, 30, 31, 32 மற்றும் 33வது வார்டுகளுக்கு நடந்தது. இங்கு, வரும், 13ம் தேதி வரை இம்முகாம் நடக்கிறது.
முகாமை நகராட்சித்தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன் மற்றும் கவுன்சிலர்கள் துவக்கி வைத்தனர்.வரும், 14ம் தேதி முதல், 17ம் தேதி வரை, சதாசிவம் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25வது வார்டு மக்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.தாராபுரம் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில், வரும் 18 முதல் 21ம் தேதி வரை, 1, 2, 3, 4, 5, 13 மற்றும் 14வது வார்டு மக்களுக்கு நடக்கிறது.பார்க் நகராட்சி பள்ளியில், வரும், 22 முதல் 25ம் தேதி வரை, 10, 11, 12, 13, 18 மற்றும் 24வது வார்டுகளுக்கும், ராஜலட்சுமி நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில், வரும், 26 முதல், 30ம் தேதி வரை, 6, 7, 8 மற்றும் 9வது வார்டு மக்களுக்கு, ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது.இதில், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், கை ரேகை பதிவு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
