உடுமலைப்பேட்டை மளிகைக்கடையில் நூதன முறையில் கொள்ளை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உழவர் சந்தைக்கு எதிரில் ஸ்டாலின் என்பவர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வந்த ஒருவர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் இங்குள்ள கோவிலில் அன்னதானம் வழங்க மளிகைப் பொருட்கள் வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் கொடுத்தமளிகை லிஸ்ட்டில் இருந்த ரூ 12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஆட்டோவில் ஏற்றி ஆண்டாள் சீனிவாசன் லே அவுட் பகுதியில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பொருட்களை இறக்கி வைத்த அந்த நபர் மேலும் சில பொருட்கள் தேவைப்படுவ தாகவும் அவற்றை கொண்டு வந்து கொடுத்து விட்டு மொத்தமாக பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மளிகைக் கடை உரிமையாளரும் கடைக்கு சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்துள்ளார். அங்கே அந்த நபரையும் காணவில்லை, மளிகைப் பொருட்களையும் காணவில்லை. கோவிலில் விசாரித்தபோது வேறு சில கோவில்களுக்கு பொருட்களை பிரித்து கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறி பொருட்களை ஒரு காரில் ஏற்றி கொண்டு அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
நூதன முறையில் ஏமாற்றி மளிகைக் கடையில் சுமார் 12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மளிகைக் கடை உரிமையாளர் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் உடுமலைப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் இருந்த சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் குற்றவாளியை தேடி வருகிறார்கள்.