காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை
![காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை](https://aramseithigal.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-30-at-3.04.51-PM.jpeg)
காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் பெரிய எல்லை கொண்ட காவல் நிலையமாக உள்ளது. இதில் 56 கிராம ஊராட்சிகளும் 15 சிறு கிராமங்கள் என மொத்தம் 71 கிராமங்கள் உள்ளடக்கி சட்டம் ஒழுங்கு காவல் பணிகளை காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் மேற்கொண்டு வருகிறது.
பெரிய எல்லைகளைக் கொண்டு செயல்பட்டு வருவதால் அவ்வப்போது ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்களை கண்காணிப்பதில் பெரிய சிக்கல் ஏற்படுவதாகவும் இதனை இரண்டு காவல் நிலையமாக மாற்றினால் சட்டம் ஒழுங்கு முறையாக கண்காணிக்கப்படும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.
இந்நிலையில் பொதுவாகவே காவல்துறைக்கு கஞ்சா விற்பனை பெண்கள் பாதுகாப்பு இன்மை என பல புகார்கள் அவ்வப்போது எழுவதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ள அந்தந்த பகுதி கிராம முக்கிய பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் , பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே காவல்துறையால் சிறந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதை முற்றிலும் அகற்ற இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தால் அத்தகவல் ரகசியம் காக்கப்பட்டு உடனடியாக கூறிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமையும்.
மேலும் கிராமங்களில் பாதுகாப்பு கருவி இருபதுக்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்களை அமைத்து அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா என்ற போதை பொருளை முற்றிலும் அழிக்க அதை விற்பனை செய்வோம் மற்றும் அதனை சப்ளை செய்வோம் என இரு தரப்பினரின் குறித்த தகவல்களை அளிக்கும் பட்சத்தில் அக்கிராமம் சிறத்த முன்மாதிரி கிராமமாக விளங்கி இளைஞர்கள் அனைவரும் வாழ்வில் சிறப்புடன் வாழ அனைவரும் இணைவோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என தெரிவித்த போது, ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், பொதுமக்கள் காவல்துறை உடன் இணைந்து செயல்பட எப்போதும் தயாராக உள்ளதாகவும் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தால் , அவர்களை வழக்கில் சேர்க்கும் போக்கை காவல்துறை கைவிட்டால் அனைத்தும் சிறப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.
மாமன்ற உறுப்பினர் கயல்விழிசூசை பேசுகையில் , ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிட நலப் பள்ளி பகுதி , காந்திநகர் பகுதிகளில் அவ்வப்போது காவல்துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்ற செயல்களுக்கு பொதுவாகவே பெரிதும் உதவும் பழைய கட்டிடங்களை அப்புறப்படுத்த அரசுக்கு காவல்துறை கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், கோட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் துணை காவல் ஆய்வாளர் என பல காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.