கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கும்பகோணம் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம்,
கும்பகோணம் அலங்கார அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு நடந்த திருப்பலியில் ஏசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் பைபிள் வசனங்கள் வாசிக்கப்பட்டு, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் குழந்தை ஏசு சொரூபத்தை ஆயர் அந்தோணிசாமி உயர்த்தி காண்பித்து குழந்தை ஏசுவின் பிறப்பை அறிவித்தார்.
இதில் மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை சிங்கராயர், பங்குத்தந்தை பிலாமின்தாஸ், உதவி பங்குத்தந்தையர்கள் எட்மன்ட் லூயிஸ், பிரேம்நாத் மற்றும் செயலாளர் செல்வா, பொருளாளர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல் கும்பகோணம் – தஞ்சை மெயின்ரோட்டில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை தூய தோமா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சபையின் குரு ராய்கெஷியான் தலைமையில் அதிகாலை 4.30 மணிக்கு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சபையின் பொருளாளர் ஆல்பர்ட், செயலாளர் ஸ்ரீராஜ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.