கும்பகோணம் அருகே சோழபுரத்தில் வேகத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் தென்னை மரத்தின் மீது பறந்து மோதி விபத்துக்குள்ளானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, மத்திகிரி, சுபாஷ் நகரை சேர்ந்தவர் ராமபுத்திரன் மகன் ஸ்ரீகிருஷ்ணா (34), இவரது மனைவி சிவானி (29) மற்றும் இவரது நண்பர் பெங்களூரை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மோகன் (34) இவரது மனைவி பூவிழி (28).இந்த இரண்டு தம்பதியினரும் பெங்களூரில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
நேற்று காலை தஞ்சையில் உள்ள பெரிய கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பின்னர் நேற்று மதியம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோயிலுக்கு கும்பகோணம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை ஸ்ரீ கிருஷ்ணா ஓட்டி வந்துள்ளார்.
அப்போது கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி கடைவீதியில் நேற்று மதியம் வந்து கொண்டிருந்தபோது அகராத்தூர் ஊராட்சி, கொத்தவாசலை சேர்ந்த சண்முகம் (70) என்ற முதியவர் சாலையின் குறுக்கே சென்றுள்ளார்.
அப்போது காரை வேகமாக ஓட்டி வந்த ஸ்ரீகிருஷ்ணா அந்த முதியவர் சண்முகம் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டுள்ளார். அப்போது வேகத்தின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சுமார் 20 மீட்டர் தூரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது பறந்து மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த முதியவருக்கும் காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதில்
காரில் பயணம் செய்த பூவிழி என்பவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டும், மோகன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த நான்கு பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதலுதவி பெற்ற பூவிழி, ஸ்ரீகிருஷ்ணா மற்றும் மோகன் ஆகியோர் கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.