தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 15ஆம் தேதி துவங்க உள்ள புத்தகக் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக அரசின் ஆலோசனைப்படி உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தின் அருகே பிரம்மாண்ட திறந்தவெளி மைதானத்தில் 15ஆம் தேதி பிரம்மாண்டமான புத்தகக்கண்காட்சி துவங்க உள்ளது, இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்பணிகள் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காச நோய் அறிகுறிகளை கண்டறியும் வகையில் நடமாடும் நுண்கதிர் வாகனத்தை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,காசநோய் தடுப்பு நடவடிக்கையாக துவக்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் காசநோய் அறிகுறி உள்ள 21 ஆயிரத்து 354 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2830 நபர்களுக்கு காச நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும்,

உடல் எடை குறைவது, தொடர் சளி, இருமல் நெருக்கமான பகுதிகளில் வசிப்பவர்கள் நூல்களில் சோதனை செய்து கொள்ளும் வகையில் நடமாடும் வாகனம் செயல்படும் எனவும் இவ் வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
