தஞ்சையில் டாஸ்மாக் கடையின் சுவரை உடைத்து கொள்ளை முயற்சி; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

தஞ்சை மேரிஸ் கார்னர் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. பாருடன் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன் உள்ளிட்ட நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் பாரிலும் சிலர் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று இரவு பணி முடிந்து டாஸ்மாக் கடை மற்றும் பார் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பின் பக்கமாக வந்து இரும்பு கம்பியால் சுவரை உடைத்துள்ளனர் அப்போது சுவர் உடைக்கும் சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதனைப் பார்த்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர் இதையடுத்து சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டனர். அதில் சில அடி நீளத்துக்கு சுவரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

முன்பக்கம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் பின்புறமாக வந்து சுவரை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளை அடிக்க முயன்றது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
