தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு இளம்பெண் கொரோனாவுக்கு பலி உருமாறிய கொரோனா வா என கண்டறிய சோதனைக்கு சளி ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடந்த 3 மாதங்களாக கொரோனாவுக்கு யாரும் பலியாகாமல் இருந்தது ஆறுதல் அளிக்க கூடியதாக இருந்தது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பலியானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கபட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்தார்.
இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும் இறந்த பெண்ணுக்கு இணை நோய் ஏதும் இல்லை என்பதும், 2 தடுப்பூசி போட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் அப்பெண் இறந்தது பொதுமக்களை மட்டுமில்லாமல் மருத்துவ துறைையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு உருமாறிய வகையான பிஏ-4, பிஏ-5 கொரோனா வைரஸ் உள்ளதா என கண்டறிய அவரது ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பெண்ணின் மாதிரி பரிசோதனை செய்த பிறகு அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு உருமாறிய கொரோனாவா, அல்லது கோவிட்-19 என்பது தெரிய வரும்.
